
தாழ்த்தப்பட்ட வகுப்பினரே, தோட்டிகள் என்கிற மனிதக் கழிவை அகற்றும் பணி செய்யும் பிரிவினரை இழிந்தவராகக் கருதுகின்றனர். தீண்டாமையின் உச்சக் கட்டக் கொடிய வடிவமான மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் இழிநிலை இந்தியா சுதந்தரம் பெற்று 63 ஆண்டுகளுக்குப் பின்னும் நீடிப்பது வெட்கக்கேடாகும்.

மனிதக் கழிவை மனிதர் அகற்றுவதற்கான தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பத்து ஆண்டுகளுக்குப் பின்னும், இலட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை எதிர்த்து மனித உரிமை அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் 2003ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தன. எனவே, மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலை குறித்து மாநில அரசுகள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

உத்திரப்பிரதேச அரசு அம்மாநிலத்தில் மனிதக் கழிவை மனிதர் அகற்றும் நிலை இருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தம் மாநிலத்தில் இந்நிலை இல்லை என்று தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டிலும் பல இடங்களில் மனிதக் கழிவைத் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்கள் அகற்றுவதை ‘தலித் முரசு’ போன்ற இதழ்கள் படங்களுடன் வெளியிட்டுள்ளன.

அரியானா மாநிலத்தில் 2010 மே மாதத்தில் அம்பாலா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன், வாழ்நாள் முழுவதும் மனிதக் கழிவை அகற்றும் தொழில் செய்து வந்த தலித்துகள் 60 பேர் தாம் பயன்படுத்திய மலம் தூக்கிச் செல்லும் கூடைகளைத் தீயிட்டுக் கொளுத்தினர். இவர்களுக்கு ‘மறுவாழ்வு’ அளிக்கும் திட்டத்தின் கீழ் உள்ளாட்சிகளில் துப்புரவுப் பணியாளர்களாக இவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
ஆனால் அய்ந்து மாதங்கள் கழித்து துப்புரவுப் பணியிலிருந்து இவர்கள் நீக்கப்பட்டனர். அம்பாலா மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.ஸ்ரோ, “மனிதக் கழிவை அகற்றி வந்த 200 பேருக்கு மாதம் ரூ.4,400 சம்பளத்தில் உள்ளாட்சியில் துப்புரவுப் பணியாளர் வேலை கொடுத்தோம். மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இந்த வேலை தரப்பட்டது. ஆனால் அவர்கள் துப்புரவுப் பணியை ஒழுங்காகச் செய்யவில்லை. எனவே அவர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டோம்” என்று கூறினார். (தி இந்து 26.10.10). மனிதக் கழிவை அகற்றுவோருக்கான மறுவாழ்வுத் திட்டம் வேண்டா வெறுப்பாக மேல்சாதி அதிகார வர்க்கத்தால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நகரங்களில் வீடுகளில் உள்ள உலர் கழிவறைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். நகரங்களில் பல வீடுகளில் கழிவுத் தொட்டி அமைக்காமல், கழிவறையிலிருந்து மலம் தெருவில் உள்ள கழிவுநீர்க் கால்வாய்க்குச் செல்லுமாறு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. நகராட்சி நிருவாகம் இவற்றைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும். நடுவண் அரசின் மனிதக் கழிவை அகற்றும் குடும்பங்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தை மாநிலங்கள் முறையாகச் செயல்படுத்த வேண்டும். இக் குடும்பங்களின் பிள்ளைகளுக்குக் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் சிறப்புரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

மாநகரங்களில் பாதாளச் சாக்கடைகளில் கழிவுகளை அகற்றும் பணியில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தப் பணிக்காகப் பாதாளச் சாக்கடையில் இறங்கும் போது விஷவாயு தாக்கிப் பலர் இறக்கின்றனர். இது குறித்து சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இப் பணியில் இனி மனிதர்களை ஈடுபடுத்தமாட்டோம்; எந்திரங்கள் மூலமாக இப்பணி செய்யப்படும் என்று தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் உறுதி கூறப்பட்டது. ஆயினும் அதன்பிறகும் பாதாளச் சாக்கடையில் கழிவை அகற்றும்போது சிலர் இறந்தனர். எனவே நாராயணன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தமிழக அரசு மீது தொடர்ந்தார். 7.12.10 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நேர்நின்று அய்.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர் விளக்கமளித்துள்ளனர். சாக்கடைப் பராமரிப்புப் பணிகள் தொடர்பாக இன்னும் 4 வாரத்துக்குள் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். (தினத்தந்தி 7.12.10)

நன்றி : கீற்று இணையதளம்
No comments:
Post a Comment