Friday, October 8, 2010

1935 அக்டோபர் 13ஆம் நாள் மகாராஷ்டிர மாநிலத்தில்
உள்ள நாசிக் மாவட்டத்தில், இயோலாவில் டாக்டர் அம்பேத்கர்
ஒரு பிரகடனம் செய்தார்.



""
நான் ஓர் இந்துவாக சாகப்போவதில்லை
என்று உங்களுக்கு உறுதிமொழி தருகிறேன்.''



இந்தப் பிரகடனத்தின் பின்னணியில் அவர் பம்பாய் தாதரில் 1936 மே 30-31 தேதிகளில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். தமது மதமாற்ற இயக்கத்துக்குத் தம்முடைய மக்கள் எந்த அளவு ஆதரவு
தருகிறார்கள் என்பதை அறியும் ஒரே நோக்கத்தோடு இந்த மாநாட்டைக் கூட்டினார். இதில் 35,000 தீண்டத்தககாத மகர்கள் கலந்துகொண்டார்கள்.



மாநாட்டு பந்தலில் கீழ்க்கண்ட
முழக்கங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன.





மதம் என்பது மனிதனுக்காக; மனிதன் மதத்திற்காக அல்ல.




உங்களுக்கு மனிதத் தன்மை வர வேண்டுமானால் நீங்கள் மதம் மாறுங்கள்.
அமைப்பு ரீதியாகத் திரள வேண்டுமானால் மதம் மாறுங்கள்.
வலிமை பெற வேண்டுமானால் மதம் மாறுங்கள்.
விடுதலை பெற வேண்டுமானால் மதம் மாறுங்கள்.
உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக விளங்க வேண்டுமானால் மதம் மாறுங்கள்.
உங்களை மனிதர்களாக நடத்தாத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் நீடிக்க வேண்டும்?
கோயில்களுக்குள் நுழைய உங்களுக்கு அனுமதி மறுக்கும் ஒரு மதத்தில்
நீங்கள் ஏன் நீடிக்க வேண்டும்?

உங்களை தண்ணீர் குடிக்க அனுமதிக்காத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் நீடிக்க
வேண்டும்?

உங்களுக்குக் கல்வி மறுக்கும் மதத்தில் நீங்கள் ஏன் நீடிக்க வேண்டும்?
ஒவ்வொரு கட்டத்திலும் உங்களை அவமதிக்கும் ஒரு மதத்தில் நீங்கள்
ஏன் நீடிக்க வேண்டும்?
உங்கள் வேலை வாய்ப்புக்குத் தடையாக நிற்கும் ஒரு மதத்தில் நீங்கள்
ஏன் நீடிக்க வேண்டும்?
மனிதனுக்கு மனிதன் சரியான உறவுகள் கொள்வதைத் தடுக்கின்ற மதம் மதமே
அல்ல; அது அடக்குமுறையின் அடையாளம்.
மனித குலத்தை ஒரு சீராக மதிப்பதை மத விரோதமாகக் கருதும் மதம் மதமே
அல்ல. அது ஒரு மன நோய்.
புனிதமற்ற விலங்குகளைத் தொடுவதை அனுமதிக்கும் ஒரு மதம் அதே சமயம்
மனிதனுக்கு மனிதன் தொடுதல் கூடாது என்று தடுக்குமானால் அது மதம் அல்ல; மடமை.
ஒரு வகுப்புக்குக் கல்வி உரிமை இல்லை என்றும், அவ்வகுப்பு செல்வம் சேர்க்கக்கூடாது என்றும், ஆயுதம் ஏந்தக் கூடாது என்றும் தடை செய்யும் ஒரு மதம் மதமே அல்ல. மனித வாழ்வையே கேலிக் கூத்தாக்கும் ஒரு மார்க்கம்.
கல்வி அறிவற்றவன் அதே நிலையில் இருக்க வேண்டுமென்றும் ஏழை ஏழையாகவே நீடிக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகின்ற மதம் மதமே அல்ல; அது ஒரு தண்டனை.
கடவுள் எங்கும் உள்ளார் என்று உபதேசம் செய்து விட்டு, சக மனிதர்களை விலங்குகளை விடவும் கீழ்த்தரமாக நடத்துபவர்கள் வேடதாரிகள். அவர்களோடு நட்புறவே வைத்துக்கொள்ள வேண்டாம்.



எறும்புகளுக்குச் சர்க்கரை போடுபவர்கள் மனிதர்களைத் தண்ணீர் குடிக்காத
வண்ணம் தடுத்து, அவர்களை உயிர்க் கொலை செய்கிறார்கள் என்றால் அவர்கள் வேடதாரிகள்; அவர்களுடன் நட்புறவு வைத்துக் கொள்ள வேண்டாம்.

நன்றி தோழர் மகிழ் நன் கயல்

www.ambedkar.in

No comments:

Post a Comment